Vallalar Universal Mission Trust   ramnad......
தடுத்தெனை ஆட்கொண்ட தந்தைய ரேஎன் தனிப்பெருந் தலைவரே சபைநடத் தவரே
தடுத்தெனை ஆட்கொண்ட தந்தைய ரேஎன்
தனிப்பெருந் தலைவரே சபைநடத் தவரே
தொடுத்தொன்று சொல்கிலேன் சொப்பனத் தேனும்
தூயநும் திருவருள் நேயம்விட் டறியேன்
விடுத்திடில் என்னைநீர் விடுப்பன்என் உயிரை
வெருவுளக் கருத்தெல்லாம் திருவுளத் தறிவீர்
அடுத்தினிப் பாயலில் படுக்கவும் மாட்டேன்
அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே.
 காசையும் பணத்தையும் கன்னியர் தமையும்
காணியின் ஆட்சியும் கருதிலேன் கண்டீர்
நேசநும் திருவருள் நேசம்ஒன் றல்லால்
நேசம்மற் றிலைஇது நீர்அறி யீரோ
ஏசறல் அகற்றிவந் தென்னைமுன் ஆண்டீர்
இறையவ ரேஉமை இன்றுகண் டல்லால்
ஆசையிற் பிறரொடு பேசவும் மாட்டேன்
அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே.
 என்பொருள் என்உடல் என்உயிர் எல்லாம்
ஈந்தனன் உம்மிடத் தெம்பெரு மானீர்
இன்பொடு வாங்கிக்கொண் டென்னையாட் கொண்டீர்
என்செயல் ஒன்றிலை யாவும்நும் செயலே
வன்பொடு நிற்கிலீர் என்பொடு கலந்தீர்
வள்ளலே நும்திரு வரவுகண் டல்லால்
அன்பொடு காண்பாரை முன்பிட மாட்டேன்
அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே.