அருள்பழுத்த செழுங்கனி-
அகம்பழுத்த சிவஞான அமுது-
முத்திப் பொருள்பழுத்த அருட்பாவை எமக்களித்த
தெய்வமணப் பூ-என்றும்
மருள்பழுத்த அடியேங்கள் மனவிருளை அகற்றவரு மாமணி-மெய்ம்மைத்
தெருள்பழுத்த வடலூர்வாழ் திருவருட் பிரகாச வள்ளலார்..
தன்னை இறையருளால் மறைத்துக் கொண்டு ஐந்தொழில் இயற்றும் வல்லபராய் நம்மோடு என்றென்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்னும் திடசங்கல்பத்தோடு அவரது சமூகச் சிந்தனைகளை மக்களிடம் எடுத்துச்சென்று ஜீவகாருண்யத் திறவுகோல் சம்பாதிக்கும் சாதகர்களாய் அவர்களை மாற்றுதற்கான மகத்தான திருப்பணிகளை முன்னெடுப்பதை விட்டு..
அவரது உயிரெங்கே..உடம்பெங்கே..?அவர் கற்பூரமாய்க் கரைந்தாரா..மறைந்தாரா..அவர் இறைவனில் இரண்டறக் கலந்தாரா..இறைவன் வந்து அவரில் கலந்தானா...? என்றெல்லாம் இன்றும் விழல் விவாதங்களில் ஈடுபட்டு வெற்றென வீழ்ந்து கிடப்பதா சன்மார்க்கம்?
வித்தகம் வெளிப்படுத்தி வெளிச்சம் கூட்டிக்கொள்வதால் மட்டுமே பாமரர்க்கு என்னபயன்?
அவர் விழிதிறக்கும் எளிமையில் அன்றோ சன்மார்க்கம் வெல்லும்!
புரியாத தொடர்கள்..பொருள்கள்..தத்துவங்கள்..கருத்துகள் பற்றிய எளியநடைப் பொழிப்புரைகள் சொல்லாது அவரது சொற்களையே அப்படியே கையாண்டு மயக்குவிக்கும் உரைகாரர்கள்தான் பெரிதும் உள்ளனர் இன்று.
கண்கட்டிப் பேசினால் கருத்துவிளக்கம் எப்படி ஏற்படும்.
உண்மையை உடைத்துச் சொன்னால்..
வள்ளலாருக்கு இப்போது தேவை..புலியூர்க் கேசிகன் உரை.
புரிந்து கொள்வார்களா சன்மார்க்கச் சான்றோர்கள்!
2 Comments
வள்ளல் பெருமானின் கொள்கைகளையும் போதனைகளையும் எளிய குழப்பமற்ற முறையில் நாம் அனைத்து தமிழ் மக்களுக்கும் முதலில் எடுத்துச் சொல்ல வேண்டும். அதற்காக தம்மை அர்ப்பணித்துள்ள கவிஞர்.கங்கை மணிமாறன் அவர்களின் பணிகளுக்கு பாராட்டுக்கள்.