அருள்பாவலர் சக்திவேல் .வே
வாடிய பயிரைக் கண்டு வாடிய வள்ளலின் அருளுள்ளமும் வைகாசி பதினொன்றும்....!*
*வாடிய பயிரைக் கண்டு வாடிய வள்ளலின் அருளுள்ளமும் வைகாசி பதினொன்றும்....!*

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்…! எனும் அருள்கவியின் வரியை கேள்வியுறாத தமிழ்ச் செவிகளே இருக்க வாய்ப்பில்லை...!

*''வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்…!’'* எனத் தொடங்கும் அருட்பாவின் அடுத்த வரி என்னவென்று தெரியுமா....?

*“பசியினால் இளைத்தே வீடுதோற் இரந்தும் பசியறாது அயர்ந்த வெற்றரைக் கண்டு உளம் பதைத்தேன்...!''* என்பதே அடுத்த வரியாகும்.

பசிக் கொடுமையினால் வீடுதோறும் பிச்சை கேட்டும், உணவு கிடைக்காமல் உடல் இளைத்து மெலிந்த ஏழை எளியோரைக் கண்டு தம் உள்ளம் நடுநடுங்கியதாக வள்ளல் பெருமானார் இப்பாடலில் குறிப்பிடுகின்றார்.

பசிக்கொடுமையினால் அயர்ந்து சோர்ந்த தமிழர்களுக்கு ஏதாவது செய்தாக வேண்டுமென , அத்தூய துறவுள்ளம் துடிதுடித்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் மையப்பகுதியான அன்றைய தமிழகத்தில் ஆங்கிலேய - அன்னியரின் சுரண்டலாலும் , உணவு பஞ்சத்தாலும் பட்டினி சாவு அதிகரித்திருந்தன. எந்த வகையாலும் ஆதாரம் (ஆகாரம்) இல்லாத ஏழை எளியோர்களுக்குத் தினசரி பேதமின்றி உணவு வழங்க வள்ளல் பெருமானாரின் கருணை உள்ளம் திட்டம் தீட்டியது. அதன் விளைவு ; ஆதரவற்ற ஏழை எளியோர்களுக்குத் தினசரி மதிய - இரவு உணவுகளை வழங்கும் நோக்கத்தோடு சத்திய தருமச்சாலை எனும் அமைப்பை வடலூரில் வள்ளல் பெருமனார் தொடங்கினார்கள்.

*பிரபவ வருடம் (1867) வைகாசி 11-ஆம் நாள் வியாழக்கிழமை சத்திய தருமச்சாலையின் தொடக்கவிழா நடைப்பெற்றது.* அன்றயதினம் வள்ளல் பெருமானாரின் தவக்கரத்தால் மூட்டிய அடுப்புத் தீ இன்று வரை அணையாமல் ஏழை எளியோரின் பசித்தீயை அணைத்து வருகின்றது.

சத்திய தருமச்சாலையின் தொடக்க விழாவே புதுமையாய் அமைந்திருந்தது. சத்திய தருமச்சாலையின் செங்கல் கட்டடம் கட்டுவதற்கான அஸ்திவாரம் தோண்டும் பணி ஒருபுறம் நடைப்பெற்றது; அதேவேளையில் மறுபுறம் தற்காலிகமாக அமைக்கப்பட்ட இடத்தில் தருமச்சாலை தொடங்கி ஏழையெளியோர்களின் பசிப்பிணியை நீக்கிக்கொண்டிருந்தது.

ஆம்... , பொதுமக்களின் நலன் காக்கும் தர்மப் பணியின் மனை முகூர்த்தமும் , தர்மக் காரியத்தின் தொடக்க விழாவும் ஒருங்கே ஒரே நாளில் ஒரே பொழுதில் நடந்தேறியது.

'நன்றே செய்க; இன்றே செய்க' - என்ற தமிழ் மரபில் வந்த வள்ளல் பெருமானாரின் செயல் வீரத்தைப் பாராட்டுவதா ? அல்லது ஏழை எளியோரின் பசிப்பிணியை உடனடியாக நீக்க துடித்த கருணையுள்ளத்தைக் கண்டு வியப்பதா? .

*'பசியினால் இளைத்தே வீடுதோற் இரந்தும் பசியறாது அயர்ந்த வெற்றரைக் கண்டு உளம் பதைத்தேன்*' - என்று வள்ளல் பெருமானார் எழுதியதுடன் மட்டும் நின்றுவிடாமல் , ஏழை எளியவர்களின் பசிப்பணியை நீக்க வழிவகையையும் செய்தார்கள்.

தருமச்சாலையின் தொடக்க விழா நடைபெற்ற பொழுதே, அவ்விடத்தின் அருகே கிணறு , குளம் முதலிய நீர் நிலைகளும் தோண்டப்பட்டன. சத்திய தருமச்சாலையின் முதல் நாள் அன்னதானத்திற்கு , மாட்டு வண்டிகள் மூன்றில் அரிசி மூட்டைகளும் , ஒரு வண்டியில் காய்கனிகளும் வந்திறங்கியதைக் கூ. துரைசாமி ஐயா எழுதிய கடிதத்தால் அறிய முடிகின்றது. தருமச்சாலையின் தொடக்க விழா நாளில் மட்டும் சுமார் மூவாயிரம் பேர் சாப்பிட்டதாக மு.அப்பாசாமி ஐயா எழுதிய கடிதத்தால் அறியமுடிகின்றது.

இருபத்தொன்றாம் நூற்றாண்டின் இன்றைய சூழலில் கூட, ஆங்காங்காகே தேனீர் கடைகளில் தனிக் குவளை கலச்சாரம் தலைவிரித்தாடுகின்றது . ஆனால் , இன்றளவிலிருந்து நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பே அனைத்துச் சாதியினரையும் ஒன்றாக அமர வைத்துச் சமபந்தி சாப்பாடு போட்டு, சமூக நீதிக்கு வள்ளல் பெருமானார் வித்திட்டார்கள்.

தருமச்சாலையின் தொடக்க விழாவில் பெருமானார் எழுதிய 'ஜீவகாருண்ய ஒழுக்கம்' எனும் உரைநடை நூலின் சில பகுதிகள் வாசித்து விளக்கி உரைக்கப்பட்டன.

*''ஜீவகாருணியத்தின் முக்கிய லட்சியமாவது எது எனில்; எந்த வகையாலும் ஆதாரமில்லாத ஏழைகளுக்கு உண்டாகின்ற பசி என்கின்ற பெரிய ஆபத்தை நிவர்த்தி செய்கின்றதே முக்கிய லட்சியம் என்று அறிய வேண்டும்...''*

*' பசி என்கின்ற நெருப்பானது ஏழைகள் தேகத்தினுள் பற்றி எரிகின்ற போது ஆகாராத்தால் அவிக்கின்றதுதான் சீவகாருணியம்...'*

என்பன போன்ற பகுதிகள் தருமச்சாலையின் தொடக்க விழாவில் விவரிக்கப்பட்டன..

தருமச்சாலையின் நோக்கம் குறித்து ஓர் அறிக்கையும் பெருமானார் அன்றையதினம் வெளியிட்டார்கள். அதன் நிறைவில் , *''ஜீவ தயையுடைய புண்ணியர்கள் தாங்கள் தங்களால் கூடியவரையில் பொருள் முதலிய உதவி செய்து , அதனால் வரும் லாபத்தை பாகஞ் செய்து கொள்ள வேண்டும்..!''* என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

வடலூரில் தருமச்சாலையை ஒட்டி நிலம் வைத்திருந்த சுமார் நாற்பது பேர் ஒன்றுகூடி, எண்பது காணி நிலத்தை இனமாக எழுதி பத்திரம் செய்து கொடுத்தனர்.

1867- வைகாசி 11- இல் தொடங்கிய சத்திய தருமச்சாலை இன்றுவரை தொய்வின்றி , தடைபடாது - இடைவிடாது ஏழைகளுக்கு உணவு வழங்கி வருகின்றது.

இக்கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்ட; *”வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்...” என்ற பாடலின், இரண்டாம் வரியின் செயல் வடிவமே தருமச்சாலையாய் மலர்ந்த்து. 'பசியினால் இளைத்தே வீடுதோற் இரந்தும் பசியறாது அயர்ந்த வெற்றரைக் கண்டு உளம் பதைத்தேன்' என்று கவிஞராய்ப் படைப்பிலக்கியவாதியாய் எழுதியதோடு மட்டும் அல்லாமல், ஏழைகளின் பசிப் பிணியை நீக்க தீர்வையும் கண்டார்கள்.*

*''வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்...!''* எனத் தொடங்கும் பாடலின் மூன்றாம் அடி…. என்னவென்று தெரியுமா?

*' நீடிய பிணியால் வருந்துகின்றோர்; என் நேர் உறக் கண்டு உளம் துடித்தேன்...!''*- என்பதே அப்பாடலின் மூன்றாம் அடி ஆகும்.

அன்றைய காலக்கட்டத்தில் பொதுமக்களில் பெரும்பாலானோர் நோய்களால் , பிணிகளால் துன்பப்பட்டு வருத்தப்படுவதைக் கண்டு வள்ளல் பெருமானாரின் கருணை உள்ளம் துடிதுடித்ததாம். அதன் விளைவாகச் சத்தியத் தருமச்சாலையின் கிளைச்சாலையாக வைத்தியச் சாலையைப் பெருமானார் தொடங்கினார்கள்.

வாழையடி வாழையாகத் தமிழ்ச் சித்தர்களின் வழியில் வந்த வள்ளல் பெருமானார், தருமச்சாலையின் கிளைச் சாலையான வைத்தியச் சாலையில் சித்த மருத்துவத்தை பொதுமக்களுக்கு வழங்கினார்கள். தருமச்சாலையானது பசிப்பணியை நீக்கியதோடு; உடல் நோயை நீக்கும் சித்த மருத்துவமனையாகவும் திகழ்தது.

வள்ளல் பெருமானார் எழுதியுள்ள 485 மூலிகைகள் பற்றிய மூலிகை குண அட்டவணையும், சஞ்சீவி மூலிகைகள் பற்றிய குறிப்பும், மருத்துவக் குறிப்புகளும் பெருமானாருக்கு இருந்த சித்த மருத்துவ ஞானத்தைப் பறைசாற்றும்.

*''நீடிய பிணியால் வருந்துகின்றோர்; என் நேர் உறக் கண்டு உளம் துடித்தேன்...!'' - என்று பெருமானார் எழுதியதுடன் மட்டும் நின்றுவிடாமல்,பொது மக்களின் நோயை நீக்க மருத்துவமனையையும் அமைத்துத் தீர்வு கண்டார்கள்.*

''வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்'' எனும் அருட்பாவின் *நான்காம் அடி* பற்றி இனி சிந்திப்போமே...!

*''ஈடின் மானிகளாய் ஏழைகளாய் நெஞ்சு இளைத்தவர் தமைக் கண்டே இளைத்தேன்!''* என்பதே அப் பாடலின் நிறைவான அடி ஆகும்.

தமிழக மக்கள் ஏழைகளாய் வாழ்வதைக் கண்டு வள்ளல் பெருமானாரிரின் மனம் வருந்தியதை, இவ் வரிகளால் நாம் புரிந்துகொள்ளமுடிகின்றது. தமிழர்களின் வறுமைக்குக் காரணம் என்னவென்று அத்தூய உள்ளம் ஆராயத்தொடங்கியது. மக்களின் வறுமை ஒழிய வழிவகை செய்தாக வேண்டுமென, அவ் அருள் உள்ளம் திட்டம் தீட்டத் தொடங்கியது. மக்களின் பசிப்பிணிக்கும், வறுமைக்கும், நோய்க்கும் மக்களின் அறியாமையே அடிப்படைக் காரணம் என பெருமானார் எண்ணினார்கள். மக்களின் அறியாமையைக் கல்வியால்தான் நீக்க முடியும் என முடிவுசெய்தார்கள்.

அதன் விளைவாகச் சத்தியத் தருமச்சாலையானது பொதுமக்களின் வயிற்றுப் பசியை நீக்கியதோடு மக்களின் அறியாமையை நீக்கி அறிவுப் பசிக்கும் தீர்வு கண்டது. தருமச்சாலையின் அடுத்த கிளைச் சாலையாகச் சன்மார்க்கப் போதினி (1867) எனும் சாஸ்திரசாலை உருவானது.

சன்மார்க்கப் போதினியில் சிறுவர் முதல் முதியோர் வரை அனைத்து வயதினர்க்கும் பொதுக்கல்வி கற்பிக்கப்பட்டது. இப் பாடச்சாலையில் தமிழ், ஆரியம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளும் கற்பிக்கப்பட்டன. இங்கு தினசரி காலை மாலை இரு வேளையும் ஐந்தைந்து நாழிகை நேரம் திருக்குறள் சொல்லிக் கொடுக்கப்பட்டது.

இப் பாடச் சாலையையொட்டி பின் (1872) சமரச வேத பாடசாலை என்றொரு சன்மார்க்க உயர் பாடசாலையும் உருவானது. இதில் பதினைந்து வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் சன்மார்க்க உயர்கல்வி கற்பிக்கப்பட்டது. இதில் படிப்பவர்களின் பயிற்சிக்கும் அவரவர்களின் குடும்பத்திற்குத் தக்கப்படி மாதந்தோறும் பொருளுதவியாகக் கல்வி உதவித்தொகையும் வழங்கப்பட்டது..

மேலும், தருமச்சாலையிலிருந்து *சன்மார்க்க விவேக விருத்தி”* எனும் இதழும் வெளிவந்தது. வள்ளல் பெருமானார் தலைமையில் பரங்கிப்பேட்டை காதர் சகாயு உள்ளிட்ட 49 அன்பர்கள், இப் பத்திரிக்கை மாதந்தோறும் வெளிவருவதற்காகப் பொருளுதவி செய்தனர்.

சத்தியத் தருமச்சாலையானது பொது மக்களின் பசிப்பிணியை நீக்கியதுடன், அறிவுப் பசியையும் நீக்கியது.

இவ்வாறாகச் சத்தியத் தருமச்சாலையைச் சார்ந்து வைத்தியச் சாலை, சாஸ்திர சாலை, உபகார சாலை, விருத்தி சாலை, உபாசனா சாலை, யோக சாலை, விவகார சாலை என ஏழு கிளைச் சாலைகளும் செயல்பட்டன.

தருமச்சாலை பொதுமக்களுக்கு தினசரி உணவு வழங்கியதுடன் நோயாளிகளுக்கு மருத்துவத்தையும் வழங்கியது. அது மட்டுமின்றி *தருமச்சாலையில் தினசரி திருக்குறள் சொல்லிக்கொடுக்கப்பட்டு தனிமனித ஒழுக்கத்தை வளர்த்தது.*
மேலும், சிறுவர் முதல் முதியோர் வரை அனைவருக்கும் மும்மொழியில் பாடம் கற்பிக்கப்பட்டது. தருமச்சாலையானது வள்ளல் பெருமானார் காலத்தில் சோறு வழங்குவதோடு மட்டுமில்லாமல் அறிவுசால் பல்கலைக் கழகம் போலவும் விளங்கியது.!.

ஓரறிவுடைய பயிர் வாடுவதைக் கண்டு வாடிய வள்ளல் பெருமானாரின் கருணையுள்ளமானது, அன்றையத் தமிழர்களின் அவல நிலையைக் கண்டும் வாடியது. அவ்வாறு வாடியதுடன் மட்டும் நின்றுவிடாமல் அவ் அவலத்தை நீக்கவும் திட்டம் தீட்டி செயல் வடிவம் கொடுத்தது.

சத்தியத் தர்மச்சாலை வள்ளல் பெருமனாரைப் பொறுத்தவரை தவச்சாலையாகவும் திகழ்ந்தது...... என்பது உங்களுக்குத் தெரியுமா....?..!

★பொதுவாக துறவிகள் - முனிவர்கள் - சித்தர்கள் தவம் செய்வதற்காக ; மக்கள் நடமாட்டமில்லாத மலை குகைக்கோ - காடுகளுக்கோ செல்வார்கள்...

★ஆனால், மிகப்பெரிய ஞானத் துறவியாக வள்ளலார் இருந்த பொழுதிலும்..... தவம் செய்வதற்காக ..... மக்களை விட்டுவிட்டு எங்கும் செல்லவில்லை..

★ஏழைகளின் வயிற்றுப் பசிக்கு உணவும் ; ஞானப் பசிக்கு அறிவு கற்பித்தலும் ; நோய்க்கு சித்த மருத்துவமும் வழங்கி மக்கள் தொண்டு செய்தார்கள்...

★இவ்வாறாக... வள்ளலார் தினசரி பகல் நேரம் முழுவதும் தர்மச்சாலையில் மக்கள் தொண்டாற்றினார்கள்..

★தர்மச்சாலையில் வள்ளலார் இரவு 12 -மணி முதல் 3 -மணி வரை மட்டுமே உறங்கினார்கள். (சித்திவளாகத்தில் வள்ளலார் இருந்த பொழுது இரவில் ஒரு மணி நேரம் மட்டுமே உறங்கினார்கள்)

★இரவில் மீதி இருந்த நேரம் எல்லாம் ... வள்ளல் பெருமனார் தவம் புரிந்தார்கள்..

★வள்ளல் பெருமனார் செய்த தவம் பலித்தது வள்ளலார் சொல்லும் வார்த்தை இதோ....

*காலையிலே என்றனக்கே கிடைத்த பெரும் பொருளே!*

*களிப்பே என் கருத்தகத்தே கனிந்த நறுங் கனியே!*

*மேலையிலே இம்மையிலே ஒருமையிலே தவத்தால்*

*மேவுகின்ற பெரும் பயனாம் விளைவை எலாம்*

*தருமச் சாலையிலே ஒரு பகலில் தந்த தனிப் பதியே!*

*சமரச சன்மார்க்க சங்கத் தலை அமர்ந்த நிதியே....!*

★எனும் திருஅருட்பா (4181) பாடலால் நாம் புரிந்து கொள்வன என்ன.... சற்றே சிந்திப்போமே..!

★வள்ளலாரின் தவத்திற்கு இரங்கிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ; ஒரு நாள் காலைப் பொழுதில் தர்மச்சாலையில் எழுந்தருளி அருள் செய்தார்கள்.....

★பல பிறவிகள் கடுந் தவம் செய்து அடையத்தக்க பெரும் பயனின் விளைவுகளை எல்லாம் இறைவன் வள்ளலாருக்குத் தந்தருளினார்கள்.

★இது போன்ற கருத்தை வள்ளலார் மேலும் சில பாடல்களில் பதிவு செய்துள்ளார்கள்..... அவை வருமாறு..

" *காலையிலே நின்றன்னைக் கண்டு கொண்டேன்*

*சன்மார்க்கச் சாலையிலே இன்பம் தழைக்கின்றேன்...."* (அருட்பா 3893)

*"...காலையிலே வந்து கருணை அளித்தே*

*தருமச் சாலையிலே வா என்றான் தான்"* (திருஅருட்பா4038)

மேற்கண்ட திருஅருட்பா வரிகளால் நாம் புரிந்துகொள்வன.....

★தர்மச்சாலை ஏழைகளின் பசியைத் தவிர்க்கும் பணியோடு மட்டும் நின்றுவிடவில்லை..

★தர்மச்சாலையில் வள்ளலார் மிகப்பெரிய கடுந்தவம் புரிந்தார்கள்.

★தர்மச்சாலையில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரும் வள்ளலாருக்குக் காட்சியளித்து அருளினார்கள்......

(கருத்துப் பதிவும் பகிர்வும்: அருள்பாவலர் சக்திவேல் .வே..)