Salem Suddha Sanmarga Sangam
பசி : ஈரானிய ஒரு நிமிட குறும்படம்

(மனதை பாதித்த, ஆங்கிலத்தில் வந்த பதிவை, தமிழில் மொழி பெயர்த்திருக்கிறேன்)

இந்த வீடியோ க்ளிப்பை பார்ப்பதற்கு முன், இதை படியுங்கள்.

ஈரானிய சினிமா தயாரிப்பாளர் ஒருவர் எடுத்த, ஒரு நிமிடம் மட்டுமே ஒடக்கூடிய இந்தக் குறும்படம், உலகெங்கும் இருக்கக்கூடிய ஏழை மக்கள் சந்திக்கும் கடும் பசியை புரிந்துக் கொள்ள உதவுகிறது.

தன் மகளுடன் மளிகைக் கடைக்குச் செல்லும் ஒரு ஏழைத்தந்தை, அங்கே ரொட்டியை திருடி விடுகிறார். திருடி விட்டு திரும்ப எத்தணிக்கும் வேளையில், அந்த கடைக்காரர் அவரை கூப்பிட்டு நிற்கச் சொல்கிறார். இதை ஏக்கத்துடன் பார்த்த மகள், ஒன்றும் புரியாத நிலையில், தன் தந்தையைப் பார்த்து, "என்ன நடக்கிறது?" என்று கேட்கிறாள்.

இதைப் புரிந்துக் கொண்ட தந்தை, கவலைப்பட்டு, மனம் கலங்கி, மன்னிப்புக் கேட்க எத்தணிக்கிறார். அதற்கிடையே, அந்த கடைக்காரர் தன் மகளிடம் பேசுவதை கேட்கிறார். "எனதருமை குழந்தையே, உன் தந்தை பணம் கொடுத்து விட்டு, மிச்சம் வாங்க மறந்து விட்டார்". அப்படி சொல்லி விட்டு, எதுவுமே நடக்காதது போல, கொஞ்சம் பணத்தை எண்ணி அந்த ஏழைத்தந்தையின் கைகளில் தருகிறார். குற்ற உணர்வில் மூழ்கி, ஒன்றும் செய்ய இயலாதவராக, தன் தலையைக் குனிந்தவாறே அந்த ஏழைத்தந்தை கடையை விட்டு வெளியேற ஒரு அடி எடுத்து வைப்பதை பார்த்து, அந்த கடையில் நின்றுக்கொண்டு, நடப்பதை எல்லாம் அமைதியாக பார்த்துக் கொண்டிருக்கும் வாடிக்கையாளர் ஒருவர், ஏழ்மையில் உணவுக்காக திருடியவரை கூப்பிட்டு சொல்கிறார்.
" சகோதரரே! நீங்கள் வாங்கிய இந்த அரிசிப்பையை மறந்து விட்டுப் போகிறீர்களே, தயவு செய்து, எடுத்து செல்லுங்கள்." என்று அரிசிப்பையை அவரிடம் கொடுக்கிறார். அதை, கனத்த மனதுடன் பெற்றுக்கொண்டு விடைபெறுகிறார், அந்த ஏழைத்தந்தை.

"ஒருவருடைய தன்மானம் மற்றும் சுய மரியாதை பாதிக்காத வகையில், பசித்தவருக்கு உணவளிப்பதும், தேவையுள்ளோருக்கும், ஏழைக்களுக்கும் உதவுவது என்பது இறைவனின் பார்வையில் பெரிய நன்மையான காரியமாக பார்க்கப்படுகிறது. மேலும், இறைவனின் ஆசீர்வாதங்களையும், கருணையையும் இந்த உலக வாழ்க்கையிலும், வர இருக்கின்ற மறுமை வாழ்க்கையிலும் பெற்றுத்தர தகுதி வாய்ந்ததாக இருக்கிறது."

800 மில்லியன் மக்களுக்கும் அதிகமானவர்களில், கிட்டத்தட்ட உலக மக்கள் தொகையில் 10 சதவீதத்தினர் பசியுடனே படுக்கைக்கு செல்வதாக புள்ளி விபரங்கள் சொல்கின்றன.( ஐ.நா வின் உலக உணவுத் திட்ட அறிக்கை-2022).

உலகத்தில் பசிக்கொடுமை அதிகரிக்கின்ற மொத்தமுள்ள 116 நாடுகளில், இந்தியா 101வது இடத்தை பிடிக்கிறது... (உலக பசி குறியீட்டு அறிக்கை - 2021)

ஏன் ஒரு மனிதனுக்கு இன்னொரு மனிதன் - இந்த உலகத்தில், உதவி செய்கிறான் எனில், இது தான் காரணம்."

"இது தான் தர்மம். இது தான் பக்தி. இது தான் பூஜை."

இது தான், எல்லா மதங்களும் வலியுறுத்துகின்ற சாராம்சமும், முக்கியமான அம்சமும் ஆகும்...