Vallalar Universal Mission Trust   ramnad......
கடவுளின் இயற்கைவிளக்கமாகிய அருள் எந்த வண்ணத்தை உடையது
கடவுளின் இயற்கைவிளக்கமாகிய அருள் எந்த வண்ணத்தை உடையது என்றறியவேண்டில்:- சொல்லுவார் சொல்லும் வண்ணங்களும், நினைப்பார் நினைக்கும் வண்ணங்களும், அறிவார் அறியும் வண்ணங்களும், அனுபவிப்பார் அனுபவிக்கும் வண்ணங்களும் ஆகிய சர்வசத்தி வண்ணங்களும் தனது ஏகதேச வண்ணங்களாக விளங்க விளக்கி விளங்குகின்ற பூரண விளக்க வண்ணத்தை யுடையது என்று அறிய வேண்டும்.


அந்த அருள் எவ்விடத்து விளங்குகின்ற தென்று அறிய வேண்டில்
:- நோக்குவார் நோக்குமிடம் நோக்கப்படுமிடம், கேட்பார் கேட்குமிடம், கேட்கப்படுமிடம், சுவைப்பார் சுவைக்குமிடம் சுவைக்கப்படுமிடம், முகர்வார் முகருமிடம் முகரப்படுமிடம், பொருந்துவார் பொருந்துமிடம், பொருந்தப்படுமிடம், பேசுவார் பேசுமிடம், பேசப்படுமிடம், செய்வார் செய்யுமிடம் செய்யப்படுமிடம், நடப்பார் நடக்குமிடம் நடக்கப்படுமிடம், விடுவார் விடுமிடம் விடுக்கப்படுமிடம், நினைப்பார் நினைக்குமிடம் நினைக்கப்படுமிடம், விசாரிப்பார் விசாரிக்குமிடம், விசாரிக்கப்படுமிடம், துணிவார் துணியுமிடம் துணியப்படுமிடம், தூண்டுவார் தூண்டுமிடம் தூண்டப் படுமிடம், அறிவார் அறியுமிடம், அறியப்படுமிடம், அனுபவிப்பார் அனுபவிக்குமிடம் அனுபவிக்கப்படுமிடம் முதலிய எவ்விடங்களிலும் எக்காலத்தும் விளங்குகின்றதென்று அறியவேண்டும்.


அந்த அருளை எதனாற் பெறக்கூடுமென் றறியவேண்டில்:- சீவகாருணிய ஒழுக்கத்தினாற் பெறக்கூடும் என்றறியவேண்டும்.