எய்வகைசார் மதங்களிலே பொய்வகைச்சாத் திரங்கள்
எடுத்துரைத்தே எமதுதெய்வம் எமதுதெய்வம் என்று
கைவகையே கதறுகின்றீர் தெய்வம்ஒன்றென் றறியீர்
கரிபிடித்துக் கலகமிட்ட பெரியரினும் பெரியீர்
ஐவகைய பூதவுடம் பழிந்திடில்என் புரிவீர்
அழியுடம்பை அழியாமை ஆக்கும்வகை அறியீர்
உய்வகைஎன் தனித்தந்தை வருகின்ற தருணம்
உற்றதிவண் உற்றிடுவீர் பெற்றிடுவீர் உவப்பே.
உடம்புவரு வகைஅறியீர் உயிர்வகையை அறியீர்
உடல்பருக்க உண்டுநிதம் உறங்குதற்கே அறிவீர்
மடம்புகுபேய் மனத்தாலே மயங்குகின்றீர் மனத்தை
வசப்படுத்தீர் வசப்படுத்தும் வழிதுறைகற் றறியீர்
இடம்பெறுபொய் வாழ்க்கையிலே இன்பதுன்பம் அடுத்தே
எண்ணிஎண்ணி இளைக்கின்றீர் ஏழைஉல கீரே
நடம்புரிஎன் தனித்தந்தை வருகின்ற தருணம்
நண்ணியது நண்ணுமினோ புண்ணியஞ்சார் வீரே
Write a comment