கருநாள்கள் அத்தனையும் கழிந்தனநீ சிறிதும்
கலக்கமுறேல் இதுதொடங்கிக் கருணைநடப் பெருமான்
தருநாள்இவ் வுலகமெலாம் களிப்படைய நமது
சார்பின்அருட் பெருஞ்ஜோதி தழைத்துமிக விளங்கும்
திருநாள்கள் ஆம்இதற்கோர் ஐயம்இலை இதுதான்
திண்ணம்இதை உலகறியத் தெரித்திடுக மனனே
வருநாளில் உரைத்திடலாம் எனநினைத்து மயங்கேல்
வருநாளில் இன்பமயம் ஆகிநிறை வாயே.
உள்ளபடி உரைக்கின்றேன் சத்தியமாம் உரையீ
துணர்ந்திடுக மனனேநீ உலகமெலாம் அறிய
வள்ளல்வரு தருணம்இது தருணம்இதே என்று
வகுத்துரைத்துத் தெரித்திடுக மயக்கம்அணுத் துணையும்
கொள்ளலைஎன் குருநாதன் அருட்ஜோதிப் பெருமான்
குறிப்பிதுஎன் குறிப்பெனவும் குறியாதே கண்டாய்
நள்ளுலகில் இனிநாளைக் குரைத்தும்எனத் தாழ்க்கேல்
நாளைதொட்டு நமக்கொழியா ஞானநடக் களிப்பே.
Write a comment