உயிர்க்கொலையும் புலைப்பொசிப்பும் உடையவர்கள் எல்லாம்
உறவினத்தார் அல்லர்அவர் புறஇனத்தார் அவர்க்குப்
பயிர்ப்புறும்ஓர் பசிதவிர்த்தல் மாத்திரமே புரிக
பரிந்துமற்றைப் பண்புரையேல் நண்புதவேல் இங்கே
நயப்புறுசன் மார்க்கம்அவர் அடையளவும் இதுதான்
நம்ஆணை என்றெனக்கு நவின்றஅருள் இறையே
மயர்ப்பறுமெய்த் தவர்போற்றப் பொதுவில்நடம் புரியும்
மாநடத்தென் அரசேஎன் மாலைஅணிந் தருளே.
தயைஉடையார் எல்லாரும் சமரசசன் மார்க்கம்
சார்ந்தவரே ஈங்கவர்கள் தம்மோடுங் கூடி
நயமுறுநல் அருள்நெறியில் களித்துவிளை யாடி
நண்ணுகஎன் றெனக்கிசைத்த நண்புறுசற் குருவே
உயலுறும்என் உயிர்க்கினிய உறவேஎன் அறிவில்
ஓங்கியபே ரன்பேஎன் அன்பிலுறும் ஒளியே
மயலறுமெய்த் தவர்சூழ்ந்து போற்றும்மணி மன்றில்
மாநடத்தென் அரசேஎன் மாலைஅணிந் தருளே.
Write a comment