சுத்தசன் மார்க்க மருந்து - அருட்
சோதி மலையில் துலங்கு மருந்து
சித்துரு வான மருந்து - என்னைச்
சித்தெலாம் செய்யச்செய் வித்த மருந்து
சுட்டப் படாத மருந்து - என்றன்
தூக்கமும் சோர்வும் தொலைத்த மருந்து
எட்டுதற் கொண்ணா மருந்து - நான்
எட்டிப் பிடிக்க இசைந்த மருந்து
சுகமறியீர் துன்பம்ஒன்றே துணிந்தறிந்தீர் உலகீர்
சூதறிந்தீர் வாதறிந்தீர் தூய்மையறிந் திலிரே
இகம்அறியீர் பரம்அறியீர் என்னேநுங் கருத்தீ
தென்புரிவீர் மரணம்வரில் எங்குறுவீர் அந்தோ
அகமறிந்தீர் அனகமறிந் தழியாத ஞான
அமுதவடி வம்பெறலாம் அடைந்திடுமின் ஈண்டே
முகமறியார் போலிருந்தீர் என்னைஅறி யீரோ
முத்தரெலாம் போற்றும்அருட் சித்தர்மகன் நானே.
Write a comment